மாலை முரசு (Malai Murasu) சென்னை பதிப்பு – 20-06-2023
திருமங்கலத்தில் பழைய கட்டிடத்தில் இயங்கும் ஹோமியோபதி அரசு மருத்துவக் கல்லூரியை புதிய கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும்! டாக்டர்கள் வேண்டுகோள்!!
காஞ்சிபுரம், ஜூன் 20: தமிழகத்தில் மதுரை திருமங்கலத்தில் பாழடைந்த கட்டிடத்தில் சிதிலமடைந்துள்ளது அரசு ஹோமியோபதி அரசு மருத்துவக் கல்லூரியை வேறொரு இடத்தில் புதிய கட்டிடம் கட்டி இந்த கல்லூரியை அங்கீகரிக்க வேண்டும் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஹோமியோபதி மருத்துவ கருத்தரங்கத்தில் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் இந்திய ஹோமியோபதி மருத்துவ குழுமம் சார்பில் தேசிய ஹோமியோபதி மருத்துவம் குறித்த கருத்தரங்கம் இன்னர் வீல் கிளப் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு நெல்லையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் மனைதுணைவர் சீனிவாசன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஹோமியோபதி மருத்துவ கழக பொதுச்செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஹோமியோபதி மருத்துவ குழும நிர்வாக குழு உறுப்பினர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
காஞ்சிபுரத்தில் முதன்முறையாக நடைபெற்ற ஹோமியோபதி கருத்தரங்கில் ஹோமியோபதி மருத்துவர்களுக்காக அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது, ஆரோக்கிய வாழ்வை நோக்கி செல்வதற்கான பொது மருத்துவம் சார்ந்து கருத்துரைகள் நடத்துவது என்றும் இந்த கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டில் மதுரை அடுத்து உள்ள திருமங்கலத்தில் சிதிலமடைந்துள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியை உடனடியாகக் கட்டிடம் கட்டி அங்கீகரிக்க வேண்டும், மேலும் இனிவரும் காலங்களில் ஹோமியோபதி மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார மையங்களிலும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கில் ஹோமியோபதி மருத்துவர் மாதினி, மருத்துவ மாணவிகள் உள்ளிட்ட காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
(Caption under group photo): மதுரை திருமங்கலத்தில் பாழடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் ஹோமியோபதி அரசு மருத்துவ கல்லூரியை வேறொரு இடத்தில் புதிய கட்டிடம் கட்டி இந்த கல்லூரியை அங்கீகரிக்க வேண்டும் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஹோமியோபதி மருத்துவ கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.


